Sunday, December 25, 2011

புதிய எதிரிகள்

9-மார்ச் '98... முதன் முதலாக நான் கிரிக்கெட் மைதானம் சென்று சர்வதேச போட்டி ஒன்றை பார்த்தது அன்றுதான். அது ஆஸ்திரேலியா இந்தியா வந்திருந்த போது சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி. மார்க் டெய்லர் தலைமையில் மெக்ராத் இல்லாத அணி இந்தியா வந்தது. ஷேன் வார்னே மற்றும் சச்சின் உச்சத்தில் இருந்த காலம். இருவைரையும் மையப் படுத்தியே அத்தொடர் பேசப்பட்டது. அடுத்த பத்தாண்டுக்கான புதிய cricket-rivalry-க்கு வித்திட்டதும் அத்தொடர்தான் என்பதும் என் எண்ணம்.

நான் சென்றிருந்த அன்று (நான்காவது நாள்) சித்துவும், சச்சினும் ஷேன் வார்னேக்கு இந்தியா ஆடுகளங்கள் பற்றி படம் வரைந்து பாகம் குறித்து விளக்கினார்கள். ஷேன் வார்னே ஒவ்வொரு ஓவரும் வீசிவிட்டு பவுண்டரி பக்கம் ஃபீல்டிங் செய்ய வரும்போதெல்லாம் சத்தம் போட்டு நாங்கள் கேலி செய்வோம். அதற்கு அவர் சிரித்து கொண்டே நமது ஊர் முறைப்படி சிறிது குனிந்து கயெடுத்து கும்பிட்டு காட்டுவார். எங்களுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்த்த ஒரு ஆஸி தம்பதிகள் கடைசியில்(வேறு வழியில்லாமல்) எங்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். இப்படியும் சொல்லலாம்... அதாவது அன்றைய சச்சின் மற்றும் சித்துவின் ஆட்டம் ஆஸ்திரேலியர்களுக்கு கும்பிடவும் குத்தாட்டம் போடவும் கற்று கொடுத்ததென்று. மொத்தத்தில் அன்று முதன் முதலாக மைதானத்தில் கிரிக்கெட் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அந்த போட்டியில் சச்சின் நூறு மற்றும் சித்து & அசார் ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அசாரின் அற்புத சதத்தால் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது.

அது.... இந்தியா- பாக் ஆட்டங்கள் அரசியல் சிக்கல்காளால் மங்கி போயிருந்த காலம். ஆஸி-இங்கிலாந்து போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மிகுந்த ஆளுமையாலும் இங்கிலாந்து அணியின் வீழ்ச்சியாலும் சோர்வுற்றிருந்த காலம். cricket-rivalry குறைந்திருந்த காலம். அப்படிபட்ட நேரத்தில் தான் வார்னே-சச்சின் tag-உடன் இந்த புதிய ரைவல்ரி தொடங்கியது.



இந்த புதிய பகைமை வளர உதவியது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தலைமை மாற்றங்கள் தான் . Aggressive ஆளுமை கொண்ட இருவர் இரு அணிகளுக்கும் தலைவர்களாயினர். கங்குலியும் ஸ்டீவ் வாக்கும் கேப்டானாயினர். இருவருமே எனக்கு பிடித்த வீரர்கள். இருவரின் வீம்பு கலந்த வெறித்தனம் இரு அணிகளுக்குள்ளேயும் கிரிக்கெட் - பகைமையை பெட்ரோல் ஊற்றி வளர்த்தது. இந்திய-பாக், ஆஷஸ் போட்டிகளை விட மிகவும் விறுவிறுப்பாக இரு அணிகளும் மோதும் போட்டிகள் இருந்தன. ஒரு பக்க ஆட்டங்களாகவோ/தொடராகவோ இல்லாமல் மாறி மாறி இரு அணிகளும் வெற்றி பெற்றன.

இந்தியாவின் கடந்த மூன்று ஆஸ்திரேலியா சுற்றுப்பயண தொடர்களில், முன்னெப்போதுமில்லாத அளவில் இந்தியாவின் ஆட்டங்கள் முன்னேறி இருந்தது. அதுபோல ஆஸ்திரேலியாவும் முப்பது வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் தொடரை வென்றது(Final frontier).

இந்த கால கட்டங்களில், நடந்த காண்ட்ரோவர்சிகளுக்கும் பஞ்சமில்லை. கங்குலி-வாக் டாஸ் பிரச்சனை, பக்னரின் சொதப்பல் தீர்ப்புகள், பாஜி-சைமண்ட்ஸ் வசவுகள்... எல்லாம் சுவராஷ்யங்களை கூட்டின.

இந்த தொடரையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்து காதிருக்கிறேன். தொடரை வெல்ல  முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு இந்தியாவுக்கு   இருப்பதாக தெரிகிறது. கண்டவர்களும் எளிதில் ஆஸ்திரேலியாவை வென்று வருகிறார்கள். ஆனால்... எதிரிக்கேற்ப ஆடுவதுதான் இந்தியாவின் தனித்தன்மையே. பலமில்லாத ஆஸ்திரேலிவுடன் இவர்களும் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து சொதப்பிவிட்டால்???  அடிபட்டு வெறியுடன் தனது ஆளுமையை மீட்டெடுக்க ஒரு கிழட்டு ஆஸி சிங்கம் வேட்டைக்கு காத்திருக்கிறது.

பார்க்கலாம்... ஆஸ்திரேலியா தனது பலத்தை மீண்டும் பெற்று ஒரு புதிய அத்தியாத்தை தொடங்குமா? ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் தொடர் வெற்றியை இந்தியா பெறுமா?

Saturday, December 24, 2011

ஆஸ்திரேலியப் போர்

இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா சென்றாலும் அப்போது ஏதேனும் வாய்ச்சவடால்கள் நடக்கும். அதற்குத் தக்க பதிலடியும் நம் மக்கள் தருவார்கள். ஆனால் பேட்டிகளின் வாய்ச்சவடால்கள் போட்டிகளில் எதிரொலிக்கும்போது நமது அணியினர் தோற்றுவிட்டு வருவார்கள்.

ஆஸ்திரேலிய அணியினர் இந்த வாய்ச்சவடால்களை விடும்போதெல்லாம் அவர்களுக்கு பக்க பலமாக ஷான் வார்ன், மெக் க்ராத் என்ற நட்சத்திரங்கும், ஸ்டீவ் வாக் என்ற விண்வெளி மண்டலமும் உடன் இருக்கும். அதற்கேற்ப எல்லாம் நடந்தது.

ஆனால் இன்று... ??

க்ளார்க் என்ற குமாஸ்தா பழங்கால குமாஸ்தாக்களைப் போல, காலையில் எழும்பி, குளித்து அலுவலகம் சென்று பெஞ்சைத் தேய்த்து, இரவு உண்டு உறங்கி வாழ்ந்ததைப் போலவே வாழ்கிறாரோ என்றே தோன்றுகிறது.

அவரிடம் துடிப்பான தலைமைப் பண்பை ஒரு சில போட்டிகள் தவிர்த்து பெரும்பாலும் பார்த்ததில்லை.

பிராட் ஹாட்டின் - அணியின் துணைத் தலைவர்... டெஸ்ட் போட்டிகளில் 2000ம் ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 2500 ரன்களும் எடுத்திருந்தாலும் 34 வயதைக் கடந்து வீறுநடை போடுகிறார். கில்கிறிஸ்ட் இடத்தில் ப்ராட் ஹாட்டினை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

மைக்கேல் ஹஸ்ஸி - கொஞ்சம் பயப்பட வேண்டிய ஆள். சொன்னா மாதிரி இவரு நின்னு காட்டினாரு...

டேவிட் வார்னர் - அதிரடி சரவெடி. இந்திய அணியில் சேவாக் போல...இவரை ஆட்டமிழக்கச் செய்தாலே டெஸ்ட் போட்டி ஸ்டேட்டஸ் வந்துவிடும். அது 20-20ஆக இருந்தாலும் கூட :)

கடைசியாக ஆருயிர் அண்ணன் - ஜாகிர்கானின் அன்பு நண்பர். பேர் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. :) இந்த ஆளும் ரெண்டு இன்னிங்க்ஸிலும் 60 ரன் எடுத்தாரு...


இவரு ஏன் ஆஸ்திரேலிய அணியில ஆடணும்னு ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளே பேசினப்போ நம்ம தங்கத் தலைவர் ட்ராவிட் தான் இவரு ஆடியே தீரணும்னு சப்போர்ட் பண்ணி இருக்கார். இதில பெரிய விசயம் என்னன்னா ட்ராவிட் மாதிரி ஸ்டைலிஷ் ஷாட் செலக்சன் வச்சிருந்தாலும் பாண்டிங்க் கிட்ட பிடிக்காத விசயம் மண்டைக்கனம்.


இப்படில்லாம் முதல் போட்டிக்கு முன்ன எழுதி வச்சிருந்தேன். ஆனா செமையா ஆப்படிச்சாங்க... நம்ம பேட்ஸ்மென்கள்...

இன்னும் சிலர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடுறாங்க. அவங்க யாருன்னு பேரைக் கூட முழுசா கேள்விப்பட்டதில்ல..

இவங்க மட்டும் தான் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடுறாங்கன்னு நினைச்சா அது ரொம்ப தப்பு.

எங்க அண்ணன் சச்சின் டெண்டுல்கர் கூட ஆஸ்திரேலிய அணிக்காகத்தான் ஆடுவார். அதே மாதிரி இப்பல்லாம் தோனி டீம்ல என்ன செய்றாருன்னே அவருக்குத் தெரியல... கோட்ச் மாதிரி டைரக்ட் பண்றதுக்கு எதுக்கு ஒரு விக்கட் கீப்பர்/பேட்ஸ்மென் ஸ்லாட்டு வேஸ்டாகுதுன்னு கேள்வி எழாமல் இல்லை. அடுத்த போட்டிலயாவது ஜெயிச்சி மானத்தைக் காப்பாத்துங்க மக்கா....

நடக்கும் என்பார்...



ரெண்டு அணி வீரர்கள் பட்டியலும் அறிவிச்சாச்சு. கபில் தேவ், இயன் சேப்பல் முதற்கொண்டு இரு நாட்டு முன்னாள்களும் இந்தியாவுக்கு இந்த முறை தொடரை வெல்ல நல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லியாச்சு. ஆரம்பிக்குது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 26ம் தேதி எப்போதும் உள்ள பரபரப்புடன், யூகங்களுடனும், தொடருக்கு முந்தைய வாய்ச்சவடால்களுடனும். இந்திய அணி வலுவாக இருப்பதாக பரவலாக பேச ஆரம்பிச்சாச்சு. நாம எப்பவுமே கண்ணாடியப் பாத்து முகத்த துடைச்சிக்கிறது கிடையாது. அடுத்தவன்கிட்ட மச்சி! மூஞ்சில ஒட்டியிருந்த தூசி போயிருச்சான்னு கேட்கிற ஆளுங்க. நாம பலமா இருக்கோமோ இல்லையோ ஆஸி பலமா இல்ல. அப்போ நமக்கு வாய்ப்பு பிரகாசமாத்தான் இருக்குன்னு சொல்லணும். கடந்து மூணு நாலு வருஷமா பாடிட்டு வர்ற அதே பல்லவி தான்னாலும் இந்த முறை கொஞ்சம் கோரஸ் கூடியிருக்கு. அப்படி இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா? இல்லை ஆஸி அணி பலம் நமக்கு புரியலையா? கொஞ்சமா அலசுவோம்.

ஆச்சு! ராகுல் டிராவிட் ப்ராட்மேன் விழாவுல பேசியாச்சு. (http://www.espncricinfo.com/ci/content/story/545355.html). ஆஸி இந்திய அணி ரெண்டு சகோதர அணிகள்... எங்களுக்குள்ள சண்டையில்ல நாங்க சமாதானமா போறோம்னு பப்ளிக்கா பச்சைக்கொடி (வெள்ளைக்கொடி) காட்டிட்டாரு டிராவிட். அதுக்கும் முன்னாடி ஒரு பேட்டியில, பாண்டிங்கிடம் இன்னும் கிரிக்கெட் பாக்கி இருக்கு, ஆனா அவரு இந்தியாவுக்கு எதிரா விளையாடாம அதக்கப்புறம் விளையாடணும்னு நான் ஆசைப்படறேன்னு ஒரு பயம் கலந்த பகடி. கபில் தேவ் சொல்றாரு பாண்டிங்கை கவனிச்சிகிட்டா இந்தியா செயிச்சிரலாம்னு. ஆக ஜெயிச்சிரலாம்னு வாய் சொன்னாலும் கண்ணுல நிம்மதி இல்ல, கால் ஆட ஆரம்பிச்சிருச்சு. ஏம்ப்பா இதே எதிர்த்து விளையாடற அணி பர்முடாவா இருந்தா சேவாக் எப்படி ஒரு ஆட்டத்துல இருநூறு அடிப்பாப்புலனு சொல்வோமா மாட்டோமா? எங்க போச்சு அந்த தைரியம்.. அந்த நம்பிக்கை? ஏனா நாம அவ்வளவு தெளிவு கிடையாது. இங்கிலாந்துல வாங்கின அடியோட வீக்கம் குறைஞ்சிடுச்சு, ஆனா அடிவாங்கின இடம் கருத்துப்போயி இருக்கே இன்னும். அதுக்கும் மேல இன்னும் ஆஸி மேல பயம் இருக்கு. க்ளார்க் இருக்கான், பாண்டிங் இருக்க்கான், ஹஸ்ஸி இருக்கான், இது போதாதுன்னு பயபுள்ளக இன்னும் மூணு நாலு புது ஆட்கள கூட்டிட்டு வந்திருக்காங்க. புதுசுங்க என்ன செய்யும்னு சொல்லவே முடியாது. மூணு புது பவுலர்கள்னா சச்சின் மூணு மாட்ச் காலி அப்படின்னு இப்போவே கணக்கு போட ஆரம்பிக்கிறோம். அப்போ இந்தியாவுக்கு தொடரை வெல்ல வாய்ப்பு அதிகம் இருக்குன்னு ஏன் சொல்லணும்? ஆங் அங்க தான் நாம சாணக்கியர்கள்னு நிரூபிக்கிறோம். டேய் இந்த பாரு... நீ பேசுவேன்னு எனக்கு தெரியும்... உனக்கு வாய் நீளம்... ஆனா நாங்களும் இப்போ பேச ஆரம்பிச்சிட்டோம்... அதனால அடக்கி வாசி... அப்படின்னு மறைமுக அறைகூவல் இது.


சமீப காலமா ஆஸி அணில சில முக்கிய மாற்றங்கள் நடந்திட்டிருக்கு. பாண்டிங், ஹஸ்ஸி ரெண்டு பேருக்கும் எதிரா அதிகமா சத்தம் கேட்க ஆரம்பிச்சிருக்கு. பாண்டிங் கொஞ்சம் சுதாரிச்சிட்டாரு ஆனா ஹஸ்ஸியோட மூட் என்னான்னு இன்னும் தெரியல. ஆனா இவங்க ரெண்டு பேரும் இந்தியாவுக்கு இந்த தொடர்ல முக்கிய சவாலா இருக்கப்போறாங்கங்கிறது மட்டும் உறுதி. அந்தக் கட்டத்துக்கு அவங்களோட சமீப கால ஃபார்மும், இந்திய அணிக்கெதிரான அவர்களோட அனுபவமும் பெரிய காரணம். இத கணக்குல வச்சுத்தான் கபில் தேவ்வும், டிராவிட்டும் கவனமா எதுக்கும் பாண்டிங் மேல ஒரு கண் இருக்கட்டும்னு ஆரம்பத்திலேயே ஒரு க்னாவ வச்சிட்டாங்க. அது சரி விஷயம் தெரிஞ்சவன் கவனமா இருப்பான்.

புதுசா மிச்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் பாட்டின்ஸன், கோவன், நேத்தன் லையான்னு ஒரு பட்டாளம் வந்திருக்கு (முதல் டெஸ்ட் அணி). இவங்கள்ல்லாம் யாரு, எப்படி, எவனவன் ஆல்-இன்-ஆல் அழகுராஜா என்பது போன்ற விவரங்கள இப்போ நம்மால சொல்ல முடியாது. ஸ்டார்க், பாட்டின்ஸன் பவுலர்கள், லையான் சுமாரா பேட்டிங் பிடிப்பாரு, கோவன் ஓப்பனர்னு சொல்லலாம். ஆனா பாருங்க மிச்சல் ஜான்சன்கிட்ட ரெண்டு மாட்ச் அடிவாங்கின ஆட்கள் தான் நாம். (அப்பாடா அந்தப்பய இப்போ இல்ல! சந்தோசம்!!) அதனால புதுசுங்கள பத்தி இந்தியா சார்புல ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நிச்சயமா சொல்லலாம்னா, சச்சின் புது ஆளுங்க கிட்ட தன்னோட விக்கெட்ட பறிகொடுப்பாருன்னு உறுதியா சொல்லலாம். அதுல இந்த பாட்டின்ஸன் கிலி கிளப்புற பயலாத்தான் இருக்கான். ரெண்டு மாட்ச்ல பதினாலு விக்கெட் எடுத்திருக்கான். 21 வயசு தான் ஆகுது... சின்னப் பய... இளங்கன்று பயமறியாது சரி... ஆனா கொம்பு முளைக்க முன்னாடியே முட்ட வருதே? கவனமா இருக்கணும்!

அப்புறம் மட்டை நாயகர்கள்... டேவிட் வார்னர்... இன்னிக்கு தேதியில சேவாக் ரஜினிகாந்துனா, இவரு ஜாக்கி சான். சேவாக் மாதிரியே தான் இவரும். அடிச்சா தரைல கால் படாம சும்மா சுத்தி சுத்தி அடிப்பாரு... ப்ராட் ஹட்டின், நிதானம் இல்லாம இன்னும் விளையாடிட்டிருக்கிற ஒரு ஆளு. ஆனா அப்பப்போ திறமையா ரன் சேர்த்திருக்காரு. அப்புறமா க்ளார்க். கேப்டன்ங்கிற பளுவோட சுத்திட்டிருக்கிற மனுசன். இன்னும் தன்னால பவுலிங் போட்டு விக்கெட் எடுக்க முடியும்னு நம்புற அளவுக்கு இந்தியா இவருக்கு விக்கெட்டுக்களை முக்கியமான சமயங்கள்ல வாரி வழங்கியிருக்கு. இவரும் ரன் தாகத்துல இருக்கார். ரிக்கி பாண்டிங்! ஏற்கனவே கொஞ்சமா பார்த்துட்டோம் ஆனாலும் இவரு இன்னும் பயம் காட்டிட்டுத்தான் இருக்காரு. அடிலெய்ட்ல ஒரு சதம் நிச்சயம்னு பட்சி சொல்லுது. சிட்னில இன்னொன்னு அடிச்சாருன்னா இந்தியாவோட தொடர் கனவு இல்லாமல் போக சாத்தியக்கூறுகள் அதிகம். அப்புறம் ஹஸ்ஸி, ஷான் மார்ஷ். இருவரும் அணியில இடத்த தக்க வைக்க போறாடிட்டு இருக்காங்க. அது பயமா இருக்கா இல்ல பக்குவமா இருக்கான்னு சொல்ல முடியாது. ஆனா ஹஸ்ஸி இந்தியாவுக்கு பெரிய தலைவலியைத் தரலாம்.

பவுலிங்கில் பீட்டர் சிடில், ஹில்ஃபென்ஹாஸ் இருவரும் பழைய முகங்கள். ஹில்ஃபென்ஹாஸ் சிட்னியில் அதிர்ச்சியைத் தரலாம். மற்றவர்கள் புது முகங்கள். பாட்டின்ஸன் எப்படியும் நான்கு (டெஸ்ட்) மேட்ச்சிலும் விளையாடுவார் எனத் தெரிகிறது. எப்படியும் ஒரு பத்து விக்கெட் எடுப்பது உறுதி.

இவ்வளவு தான் ஆஸி அணியிடம் இருக்கும் விஷயம். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை.
**********************

- கணேஷ்