Thursday, March 31, 2011

தோனி ஒரு மந்திரவாதி...

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது தான் ஃபைனல். இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் டென்ஷன், டென்ஷன், டென்ஷன்......மிலிட்டரி, போலீஸ் என்று மொகாலியே ஆடிப்போகிறது...மேட்ச் பிக்ஸிங் ஆகுமா...? இந்தியா வெற்றி பெறுமா..? கனவு பிட்ச் மும்பைக்குள் பாதுகாப்பு வளையத்துடன் பாகிஸ்தான் காலடி எடுத்து வைத்து விடுமா? எண்ணிலடங்கா கேள்விகள்..


அணி அறிவிக்கப்படுகிறது...இந்தியர் ரசிகர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு...அட ஏன் அஸ்வின் இல்லை? என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது...ஆனால் பிட்ச் சுழல் பந்திற்கு சாதகமில்லை என்று காரணம் கூறப்படுகிறது.மேட்ச் ஆரம்பிக்கிறது..இந்தியா முதல் பேட்டிங், சுழல்பந்து வீச்சாளர் அஜ்மல் வருகிறார்...அதுவரை ஆடிவந்த நமது பேட்ஸ்மேன்கள் திணற ஆரம்பிக்கிறார்கள்...ரசிகர்கள் கொதித்துப் போகிறார்கள்...அடப்பாவமே..இப்படி ஒரு பிட்சில் விளையாட அஸ்வினை எடுக்காமல், சென்ற ஆட்டத்தில் ரன்களை அள்ளிக் கொடுத்த நெஹ்ராவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்களே...? என்று டென்சன் ஆகிறார்கள்....



முதல் பேட்டிங் முடிகிறது...இந்தியா 260 ரன்கள்...பாகிஸ்தானை ஜெயிக்க, இதெல்லாம் பத்தாதடா..? என்று ரசிகர்கள் வடிவேலு பாணியில் கூறுகிறார்கள்...


நண்பர் பாஸ்ட் பவுலர் நவ்பல், தொலைபேசியில் அழைக்கிறார்...கிரிக்கெட் பற்றிய விசயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அஸ்வினை எடுத்திருக்க வேண்டும், என்ன செய்வது...பிட்ச் மாறிவிட்ட்து...என்றாளும் தோனி ஒரு மெஜிசியன்...எதாவது ஒரு கணக்குப் போட்டு கடைசியில் நமது மூஞ்சில் கரியை பூசி விடுவான்...:-) என்றார்...


இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்கிறது...நண்பர்கள் ஒன்று சேர்ந்து, அல்நாதாவில் ஒரு நண்பர் வீட்டில், நோன்புக் கஞ்சி, வடை, சமோசா என்று ஒரு வித்தியாசமான சிற்றுண்டியுடன்.. மேட்ச் பார்க்கிறோம்...இந்தியா பந்து வீச்சில் சாதிக்கிறது...அனைத்து பவுலர்களும் சொல்லி வைத்தாற்ப் போல் தலா 2 விக்கெட்களை வீழ்த்துகிறார்கள்...தோனி மீது குறை சொல்லி வந்த அனைவரும் வாயடைத்துப் போகிறார்கள்.....


பாஸ்ட் பவுலர் சொன்னது போல தோனி ஒரு மந்திரவாதி தான்...:-) சில நேரங்களில் அவர் என்ன செயதாலும் அது அணிக்கு சாதகமாகி விடுகிறது...அது ஃபைனலிலும் தொடருமா...?

நேற்றைய ஆட்டத்தில் என்னைக் கவர்ந்தவை...


  • எந்த பிட்ச் ஆனாலும் தன் சொந்த பிட்ச் போல் விளையாடும் சேவாக்கின் அதிரடி ஆட்டம்.

  • யார் என்ன சொன்னாலும், அனைத்து இளம் வீர்ர்களையும் தண்ணி வாங்கச் செய்யும் டெண்டுல்கரின் ஆட்டம்.

  • தன் பொறுப்புணர்ந்து நிதானமாக ஆடிய ரைனா.

  • 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தானின் ரியாஸ்.

  • இந்திய பவுலர்களின் ஆட்டம்..

  • நெஹ்ராவின் நேர்மை... ( அப்ரிடி கேட்ச் விவகாரத்தில்)

  • ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று ஆடிய மிஸ்பாவின் ஆட்டம்.

  • பிரசண்டேஷன் செருமனியில்...அஃப்ரிடியின் உருக்கமானப் பேச்சு...

எப்படியோ இந்தியா ஃபைனலுக்கு வந்து விட்டது...இந்தியா....மும்பை...சச்சின்...


இந்தியாவிற்கு அனைத்துமே சாதகம் தான்...இந்தியா சாதிக்குமா..?

நன்றி மிஸ்பா

 இந்தியா வெற்றி பெற்றதுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு நன்றி சொல்லணும். அதுவும் குறிப்பா பெரிய அண்ணன் மிஸ்பாவுக்கு. அவர்தான் டெண்டுல்கர் குடுத்த முதல் கேட்சை மிஸ் பண்ணி கணக்கை துவங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஒரு மூணு கேட்ச் மிஸ் பண்ணாங்க. 

அப்புறம் பேட்டிங் பண்றப்ப ரொம்ப நேரம்  எதோ டெஸ்ட் மேட்ச்ல ஆடற மாதிரியே ஆடிக்கிட்டு இருந்தான். இவன் ரொம்ப ஸ்லோவா ஆடினதுல கூட விளையாடற வீரர்கள் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் ஆகிடுச்சி. அவர் விளையாடிய முதல் 42 பந்துகளில் வெறும் 17 ரன்கள் மட்டுமே அவர் அடித்தார். அப்புறம் பவர் ப்ளேல அத சரி பண்ற மாதிரி ஆடியதுக் கைக்குடுக்கலை. ரொம்ப லேட் பண்ணிட்டாங்க அடிச்சு ஆட. 


நேத்து அணியை அறிவிச்சப்ப பொதுவா மொஹாலி பிட்ச் ஸ்பின்னருக்கு உதவாது என்பதால் அச்வின்னை தேர்வு செய்யவில்லை. ஆனால் எல்லோரும் நினைச்சதுக்கு மாறா பிட்ச் ஸ்பின்னருக்கு உதவியது. கடைசியா தன் தப்பை ஒத்துகிட்டார் தோனி. இதுதான் அவர்கிட்ட பிடிச்ச விஷயம். எதோ நேத்து இந்தியாவுக்கு நல்ல நேரம். படேல், நெஹ்ரா ரெண்டு பேருமே ஒழுங்கா பந்து வீசினாங்க . 

சனிக்கிழமை இறுதிப்போட்டி மும்பையில், சச்சினின் ஊரில். தனது நூறாவது சதத்தை அங்கே அடிப்பாரா அவர் ?

அன்புடன் எல்கே 

Sunday, March 27, 2011

இலங்கை - இங்கிலாந்து அலசல்

போட்டி நடத்துங்கடான்னா சும்மா டைம் பாஸ் வெளாட்டு விளையாடினாங்க ஸ்ரீலங்கா பசங்க...

ஸ்ரீலங்கா ஆளுங்க கைல கிடைக்கிற கேட்செல்லாம் விடுறதை இப்பத்தான் பாக்குறேன்.

இந்தியா கூட 330 ரன்னை டை பண்ண டீமை இப்படியாயா வெளுப்பீங்க?? இந்தியாவோட பேட்டிங்கும் பல்லிளிக்குது. விக்கெட்டே விழாம இப்புடி ஆடினா, அடுத்த செமி ஃபைனல் என்னாகுமோ நியூஸிலாந்துக்குன்னு பயமா இருக்கு.

நாங்க இம்புட்டு தூரம் வந்ததே பெரிசுன்னு ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சொல்லி இருக்கார். ஆமா... இங்கிலாந்துலேர்ந்து இந்தியா ரொம்ப தூரம் தான்.

முதல்ல பேட் பண்றவங்க தான் ஜெயிப்பாங்கன்னு சொன்ன பசங்களை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு கை பரபரக்குது. என்னவோ போங்கடான்னு போகவும் முடியல..

இன்னும் 63 பால் மீதி இருக்கு. 10 விக்கட் மிச்சம் இருக்கு. அப்படின்னா 350 ரன் கூட அசால்ட்டா ஜெயிப்போம்டான்னு இலங்கை சவால் விடுறா மாதிரி இருக்கு.

இதெல்லாம் பார்த்தா......

நம்ம பசங்க எப்ப என்ன செய்வாங்கன்னே தெரியாது. ப்யூஸ் சாவ்லாவையும் ஆசிஷ் நெஹ்ராவையும் டீம்ல சேர்த்து, அஷ்வினை உக்கார வச்சாலும் நாம் ஆச்சர்யப்பட முடியாது. ஏன்னா நம்ம கேப்டன் தான் விஞ்ஞானியாச்சே...

வெளையாட மாட்டாரு... ஆனா ஆராய்ச்சி பண்ணுவாரு.

எனக்கென்னமோ இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில இந்தியா ஜெயிக்கிறதுக்கு சில பேரை மட்டும் நம்பி இருக்கோமோன்னு தோணுது. டீமா ஆடினா ஜெயிக்கலாம். இங்கிலாந்து இலங்கை மேட்ச் மாதிரி... இல்லன்னா பொட்டியைக் கட்டிட்டு கிளம்பிடலாம்.

ஐபிஎல் வேற வருதுல்ல...

Thursday, March 24, 2011

ஆடுகளத்தில் அனல் பறக்குமா இன்று?

முதல் காலிறுதி என்னமோ ஒரு பயிற்சி ஆட்டம் மாதிரி ஆகிப்போச்சு. இன்னிக்கு ஆட்டமாச்சும் அப்படி ஆகாம தீயா இருந்தா சரிதான். மே.இ கிரிக்கெட்டின் கேள்விக்குறியான எதிர்காலம் தொடர்வதில் மிகுந்த மன வருத்தமே. யாராச்சும் இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும். :(

சரி... இன்னிக்கு போட்டி பத்தி பேசலாம். எனக்கு பிடிச்ச ரெண்டு அணியும் ஆடுகளத்தில் இறங்குது இன்னிக்கு. ஆஸ்திரேலியா முன்னாடி மாதிரி இல்லாததால், ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கே தன்னம்பிக்கை குறைவாகத்தான் இருக்கு. இல்லன்னா இப்படி வாயை பொத்திகிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க. இந்நேரம் சவடால்கள் பல விடப்பட்டிருக்கும். அடக்கி வாசிப்பது ஆஸ்திரேலியத்தனம் இல்லை. :)

ஆஸ்திரேலியாவின் பலவீனமாக நான் நினைப்பது பாண்டிங்கோட ஃபார்ம் மற்றும் சுழல் பந்து சுழியில் சிக்குவது. இது ஒன்னுக்கொன்னு தொடர்புடையாதலால் கொஞ்சம் சிக்கல்தான். இருந்தாலும் இவர்களின் வெறித்தனமான ஆட்டத்தால் எதையும் சாதிப்பார்கள்.

இந்தியாவின் பலவீனம் பேட்டிங் கடைசியில் சொதப்புவதும், பந்துவீச்சு தொடக்கத்தில் சொதப்புவதும். இந்தியாவின் வெற்றியை சேவாக் கொஹ்லி மற்றும் யுவராஜின் ஆட்டங்கள் முடிவு செய்யும். யுவராஜ் ஜொலித்த தொடர்கள் இந்தியாவிற்கு சாதகமா இருந்துள்ளது ஒரு ப்ளஸ்.

இந்த இரு அணிகளிமுள்ள சில ஆட்டக்காரர்களுக்கு சில வகைகளில் 'இறுதி' ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. பாண்டிங்கிற்கு அணித்தலைவராக இறுதி ஆட்டமாக அமையலாம். அவருக்கும் சச்சினுக்கும் (ஜாகிருக்கும்) இறுதி உலகக்கோப்பை ஆட்டமாக அமையலாம். தோனிக்கு அணித்தலைவராக இறுதி ஆட்டமாக அமையலாம்.

ஆஸ்திரேலியா தோற்று வெளியேறினால் பெரியளவில் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படும். இந்தியா தோற்று வெளியேறினால்??..... இதுலாம் நமக்கு புதுசா?? நாமும் நமது ஸ்டார்கள் ஐ.பி.எல்-ல் அடிச்சு நொறுக்குவதை காண ஆயத்தமாகிவிடுவோம்.

ஆக மொத்தம் ஆடுகளத்தில் இன்னிக்கு அனல் பறக்கும் என எதிர் பார்க்கலாம்.

Sunday, March 20, 2011

இந்தியா - மேற்கிந்திய தீவுகள்

இந்த ஆட்டத்தைப் பற்றி எல்லோருக்கும் சில அபிப்ராயங்கள் பேதங்கள் இருக்கக் கூடும். ஆனால் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் அடுத்த ஆட்டங்களின் ஸ்ட்ராடஜியை முடிவு செய்யும் என்பதில் யாருக்கும் வேறு சந்தேகங்கள் இருக்காது.

இன்றைய போட்டியில் தோற்றால் இந்தியா ஸ்ரீலங்காவை காலிறுதியில் சந்திக்கும். இன்றைய போட்டியில் வென்றால் ஆஸ்திரேலியாவை சந்திக்கும்.

அப்படியானால், இந்தியாவின் இந்த போட்டி நமது அரையிறுதி வாய்ப்பினை அசைத்துப் பார்க்கவே போகிறது.

உளவியல் ரீதியாக இந்தப் போட்டியில் தோற்றால் இந்தியாவிற்கு வென்றாக வேண்டுமென்ற உத்வேகம் இல்லாமல் போய்விடும் (killer instinct).

இந்தியா எல்லாப் போட்டிகளும் வெல்லும் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறோம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எல்லா நேரத்திலும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லலாம்.

தென்னாப்பிரிக்காவுடன் நாம் தோற்றவுடன் எனக்கு முதலில் தோன்றியது 2003 உலகக் கோப்பை தான். அப்போது லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றோம். ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டோம். இப்போது சவுத் ஆப்ரிக்காவுடன் தோற்றிருக்கிறோம். இறுதியில் அவர்களை எதிர்கொள்ளலாம். அப்போது பான்டிங் போல் இப்போது ஸ்மித். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் எப்போதும் உள்ளது.

நம்பிக்கை தானே சார் வாழ்க்கை....

Thursday, March 17, 2011

முதல் சுற்றின் முக்கியமான போட்டி

பி-பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டுமே. மற்ற நான்கு அணிகளில் எந்த மூன்று அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும் என்ற முக்கியமான முடிவு இந்தப் போட்டியில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் - ஆறு புள்ளிகள் பெற்று இருந்தாலும், இனி வரும் இரு போட்டிகளும் பெரிய அணிகளுக்கு எதிராக, ஒரே மைதானத்தில். நாளைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால் இந்தியா பங்களாதேஷ் ரசிகர்களும் சேர்ந்து நன்றி சொல்வார்கள். பங்களாதேஷில் சிறப்புப் பிரார்த்தனைகளே துவங்கியிருப்பார்கள் இந்நேரம். வெஸ்ட் இண்டீஸின் பலம் என்று எதையுன் அறுதியிட்டுக் கூறி விட முடியாது. ரோச் தனது வேகத்தால் நெதர்லாந்து, பங்களாதேஷ் அணியைத் திணறடித்தார். அந்த வேகம் இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு எதிரில் எடுபடுமா என்பது சந்தேகம். சென்னை எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கை கொடுத்தது இல்லை. ஆகவே இரண்டு ஸ்பின்னர்களோடு மூன்றாவதாக கிறிஸ் கெயிலின் பார்ட் டைம் ஸ்பின்னையும் உபயோகப் படுத்தலாம். வழக்கம் போல பென் இரண்டாவது ஓவர் போடுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸில் “அடித்து” ஆடக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கன்ஸிஸ்டண்டாக ஆடக் கூடியவர்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாளைய ஆட்டத்தில் அனுபவம் மிக்க சந்தர்பாலும் சர்வனும் பிரகாசிக்கலாம். பூம் பூம் கெயிலும், பூம் பூம் பூம் போலார்டும் ஸ்வானை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெஸ்ட் இண்டீஸின் வெற்றி இருக்கிறது.

இங்கிலாந்துக்கு இது வாழ்வா சாவா போட்டி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குப் போக வாய்ப்பு (உறுதி இல்லை) இருக்கிறது என்பதால் இந்த அணி தன் முழுத் திறமையையும் காட்டி ஆடும் என்பதில் எந்த மாற்று எண்ணமும் இல்லை. ஆனால் கெவின் பீட்டர்சனின் பார்ட் டைம் ஆஃப் ப்ரேக், தென்னாப்பிரிக்காவுடன் வெற்றியைத் தேடித் தந்த பந்துவீச்சு, இல்லாதது இங்கிலாந்துக்கு ஒரு பெரும் குறையே. ஸ்பின்னுக்கு ஸ்வானை மட்டுமே நம்பியிருப்பது இங்கிலாந்துக்கு பின்னடைவே. மற்ற ஸ்பின்னர்கள் யாரும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை என்பது ஸ்ட்ராஸை யோசிக்க வைக்கும் விசயங்கள். எதிர்பாராத வகையில் நன்றாக பந்து வீசி வரும் டிம் ப்ராஸ்னன் இந்தப் போட்டியிலும் கை கொடுப்பார் என்று நம்புவோம்.

பேட்டிங் பொறுத்த வரையில் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்களில் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். ரோச்சை அடித்து நொறுக்கும் பவர்ஃபுல் பேட்ஸ்மென்கள் வரிசை கட்டி இருக்கிறார்கள். ஸ்பின் பவுலிங்தான் பெரும் பிரச்சனை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்ததைப் போல நடக்க வாய்ப்பு மிக அதிகம். (இடது கை பந்து வீச்சாளர் பீட்டர்சன் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்ததை மறக்க வேண்டாம்). வெஸ்ட் இண்டீஸில் நல்ல லெக் ஸ்பின்னர் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகமே.

இந்தப் போட்டியில் டாஸ் மிக மிக முக்கியம். சென்னையின் ட்யூ ஃபேக்டர் உலகப் பிரசித்தி பெற்றது. இரண்டாவதாக ஃபீல்டிங் செய்யும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ட்யூ மிகுந்த இடையூறாக இருக்கும் என்பதச் சொல்லத் தேவையில்லை. டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங் எடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.

மொத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து காத்திருக்கிறது. 

Monday, March 14, 2011

போட்டோ டூன்ஸ்





Saturday, March 12, 2011

ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு..! ஆனா பினிஸிங் இல்லையப்பா..!!

அருமையாகப் படித்து விட்டுத் தேர்வெழுதச் சென்றானாம் ஒருவன், கேள்வித்தாளைப் பார்த்தால் அனைத்தும் மிக மிக சுலபமான கேள்வியாம், அட இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் எழுத எனக்கு சில நிமிடங்களே போதுமே எனக்கெதற்கு மணிக்கணக்கான நேரமென்று, எழுத ஆரம்பித்தவன்...நேரம் முடியும் போது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டியவன், தேர்வில் தோல்வியைத் தழுவினால் எப்படியிருக்குமோ...அப்படி இருந்தது..இன்றைய இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேலான போட்டியில் இந்தியாவின்
நிலை...:-(

ஆட்டம் ஆரம்பித்ததும் டெண்டுல்கர், சேவாக் அதிரடியில் ஆட்டம் கண்டது, நாக்பூர் அரங்கம். ஒவ்வொரு இந்திய ரசிகனும் அனுபவித்து பார்க்க வேண்டிய அந்த ஆரம்ப கட்ட, ஆட்டம் உண்மையில் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய ஒன்று..!டெண்டுல்கரும், சேவாக்கும் சேர்ந்தாடும் போது, வழக்கமாக டெண்டுல்கர், பொறுமையை கடைபிடிப்பார்...அந்தப் பொறுமை இன்று மிஸ்ஸிங்க். பத்து ஓவர்களில் 87 ரன்கள், 33 பந்துகளில் டெண்டுல்கரின் அரைசதம் என அதிரடியாக ஆரம்பித்த ஆட்டம், சேவாக்கின் விக்கெட்டிற்குப் பிறகு சற்று நிதானமானது..

38 வது ஓவரில் இந்தியா தேர்ந்தெடுத்த பவர் ப்ளேவில் அருமையான ஸ்கோரை பெற்றிருக்க வேண்டிய இந்தியா, அதில் சட சட வென விக்கெட்களை பறி கொடுத்தது, ரசிகர்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல் இந்த பேட்டிங் மற்றும் பௌலிங்கை வைத்தா நம்ம அணி, ஆஸ்திரேலியா,
பாகிஸ்தான், மற்றும் இலங்கை போன்ற ஜாம்பவான்களை எதிர் கொள்ளப் போகிறது..? என்ற கேள்விகளையும் எதிர் கொண்டுள்ளது...( இதை ஆரம்பத்திலேயே நம்ம ஆடுகள குருப் கேட்க ஆரம்பிச்சது வேறு விசயம்)

ஒரு கட்டத்தில் 267 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, பேட்டிங்கில் இந்தியாவை அடிச்சிக்க யாராலும் முடியாது என்று மார் தட்ட வைத்த இந்திய அணி, சில நிமிடங்களிலேயே வெறும் 30 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையைக் கண்டு ரசிகர்கள்..இந்திய அணி மீதான நம்பகத்தன்மையை இழந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

அடுத்து விளையாட வந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு 297 என்பது ஒரு பெரிய இலக்கு இல்லை...இந்திய பவுலர்களும் அவர்களால் ஆன முயற்சியை
செய்தும், ( பாவம் அவர்களால் என்ன செய்ய இயலும்..?) கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிகச்சாதாரணமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியது இந்தியா...(இதில் தோற்றால் என்ன? நாம தான் நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறோமே? :-) கென்யா, கனடா அணிகளையும் நம்ம குரூப்பிலே சேர்த்திருந்தா அவங்களை ட்ரா பண்ணியாவது எப்படியாவது காலிறுதிக்குள் சுலபமாக நுழைந்திருக்கலாம் .. சே வடை போச்சே..:-)
சரி இந்த தோல்விக்கு என்ன காரணம்...? நிபுணத்துவமாக உள்ளோடி யார் யாரையோ காரணம் சொன்னாலும், கடைசியில் இந்தப் பழியைத் தாங்க போவது டெண்டுல்கர் தான்...! ஆமாங்க அவர் என்ன தான் அடிச்சி, எவ்வளவு தான் ஸ்கோர் பண்ணினாலும் கடைசியில் அவர் செஞ்சுரி அடிச்சா, டீம் ஜெயிக்காது என்ற ஆருடம் தானே ஜெயிக்கிறது..! இப்போதும் வழக்கம் போல டெண்டுல்கர் மேலே பழியை போட்டு விட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்...! ( எத்தனை பெரியார் வந்தாலும் இதை நிறுத்த முடியாது ராசா...)...:-)

என்ன நடக்கும் இனி???

முதல்ல எல்லாரும் எழுந்து நின்னு கைத்தட்டிக்குவோம். எட்டு விக்கெட் போனதும் அம்புட்டுத்தான்னு அல்லாரும் முடிவு பண்ணியாச்சி. ஆனாலும் டென்ஷன் ஆவாம ஒரு ஓவர் பாக்கியிருக்கும்போதே மேட்சை முடிச்சி வச்ச மஹமதுல்லாவுக்கும் ஷஃபியுல் இஸ்லாமுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். இங்கிலாந்து நிலைமை இப்போ ரொம்ப மோசமாயிடுச்சி.

பங்களாதேஷின் இந்த வெற்றிக்குப் பிறகு க்ரூப்-பி என்னவாகும்? என்ன வேணும்னாலும் நடக்கலாம். எந்த எந்த டீம் செமிஃபைனலுக்குப் போவும்னு சொல்றது கஷ்டம்தான்.

1. இந்தியா disqualify ஆக வாய்ப்பிருக்கா??

இருக்கு. எப்படி? இந்தியா இனி வர்ற ரெண்டு மேட்சுமே தோத்து, பங்களாதேஷ், ரெண்டு மேட்சுமே ஜெயிச்சி, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸை நல்ல ரன் ரேட் வித்தியாசத்துல ஜெயிச்சா, இந்தியாவுக்கு ஆப்பு. ஆனா இது நடக்குறது கொஞ்சம் கஷ்டம்தான். இந்தியா ரெண்டுல ஒரு மேட்ச் கண்டிப்பா ஜெயிச்சிரும். அதுனால இது ஒரு ஆப்சனே இல்லை.

இப்போ பங்களாதேஷ், நெதர்லாந்து கூடவும், தென்னாப்பிரிக்கா கூடவும் ஜெயிக்க முயற்சி செய்யணும். அவங்க நல்ல நேரம் தென்னாப்பிரிக்கா கூட அவங்க ஆடும்போது இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் முடிஞ்சிருக்கும். அதை வச்சி அவங்க ஜெயிச்சே ஆகணுமா, இல்ல தோத்தாக்கூட போதுமானு முடிவு செஞ்சிக்கலாம்.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸைத் தோக்கடிக்கிறது மட்டுமில்லாம, தென்னாப்பிரிக்கா பங்களாதேஷையோ, இல்லை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கூடயோ தோக்கணும்னு ப்ரே பண்ணிட்டே இருக்கணும்.

தென்னாப்பிரிக்கா இனி இருக்கிற மூணு போட்டியில ரெண்டு போட்டியில ஜெயிச்சாக்கூட போதும். அந்த ரெண்டு போட்டியில ஒரு போட்டி பங்களாதேஷ் கூடவா இருந்துட்டா அவங்களுக்கு ரொம்பவே சேஃப்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு இனி ரெண்டு மேட்சுமே பெரிய டீமோட. அதுல ஒரே ஒரு மேட்சாவது ஜெயிச்சிட்டாங்கன்னா போதும். அந்த டீம் இங்கிலாந்தா இருந்தா அவங்க ப்ளேஸ் சேஃப்.

ஆக எல்லாத்துக்கும் பாஸிபிளிட்டி இருக்கிற க்ரூப்பா க்ரூப்-பி மாறி உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு ஒரு சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்திருக்கிறது கிரிக்கெட்டுக்கும் உலகக் கோப்பைக்கும் நல்லது.

ஒரு முக்கியமான விசயம் இதுல என்னன்னா, இதுக்கெல்லாம் அடி போட்டது, அயர்லாந்தோட வெற்றி. ஐசிசி அசோசியேட் நாடுகளை அடுத்த உலகக் கோப்பையில சேத்துக்கிறதில்லைங்கிற முடிவை அவங்க மறுபரிசீலனை செய்யறது நல்லது.

இனி நாளைய மேட்சைப் பார்ப்போம். இந்தியா இதுவரைக்கும் தோல்வியைச் சந்திக்கவே இல்லைன்னாலும், இமாலய வெற்றி இன்னும் பெறவே இல்லை. பவுலிங் ரொம்பவே வீக்கா இருக்கு. நெதர்லாந்து கூடவும், அயர்லாந்து கூடவுமே சரியா விளையாடாத இந்தியாவோட டாப் ஆர்டர், தென்னாப்பிரிக்காவோட கேர்ஃபுல்லா ஆடுவாங்கன்னு எதிர்பார்க்கலாம். ஆனா,  டாப் ஆர்டர் நல்லா ஆடுனா மிடில் ஆர்டர் கடைசியில சொதப்பிடுது. நாளைக்கி எல்லா டிபார்ட்மெண்ட்ஸும் சரியா ஆடணும். அனேகமா சாவ்லாவுக்கு பதிலா அஷ்வின் உள்ள வரலாம். நெஹ்ராவுக்கு பதிலா முனாஃப் பட்டேல் உள்ள வரலாம். இந்தியாவோட ஃபீல்டிங் இன்னும் இம்ப்ரூவ் ஆகணும்.

தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து கூட தோத்த அதிர்ச்சியில இருந்து மீண்டு வந்திருப்பாங்க. C டேக் எப்போ அவங்களை விட்டுப் போகுமோ தெரியலை. அவங்களோட டாப் பவுலர் இம்ரான் தாஹிரும் இஞ்சூர்டா இருக்கிற இந்த நிலமையில அவங்க பவுலிங்கும் கொஞ்சம் வீக்காத்தான் இருக்கும். காலிஸ் இந்தியாவோட நடந்த டெஸ்ட் தொடருக்கு அப்புறம் இன்னும் பழைய ஃபார்முக்கு வரலை. தன்னோட ஃபேவரைட் ஆப்பொனண்ட்ஸ் கூட காலிஸ் பழைய ஃபார்மை மீட்டெடுப்பாரா?? எ.பி.டிவில்லியர்ஸ் ஸ்பின் ஆடுறதுல புலி. ஆம்லா ஆசிய பிட்சஸ்ல இந்திய பவுலர்ஸை எதிர்கொள்ளக் கூடிய திறன் படைச்ச ஆள். தென்னாப்பிரிக்காவோட ஃபீல்டிங் வழக்கம்போல சிறப்பாவே இருக்கு.

இந்த ப்ளஸ் மைனஸ் எல்லாம் பார்க்கும்போது தென்னாப்பிரிக்காதான் இந்த மேட்சுல ஃபேவரைட்ஸ்னு தோணுது. ஆனா கிரிக்கெட்ல என்ன வேணும்னா நடக்கலாம்.

நாளைக்கி சில பல பத்திரிகைகள் இப்பிடி எழுதும் - “Last time when Sachin faced these opponents in Indian soil in an ODI, he scored a 200".

Anyways, ஒரு பரபரப்பான போட்டி காத்துட்டு இருக்கு.

பதிவிட்டவர்,

முகிலன்

Wednesday, March 9, 2011

என்ன அடி.. என்ன அடி...

பல்வேறு பிரச்சனைகளோடு உலகக்கோப்பைக்கு வந்த பாக்கிஸ்தான், அதிரடியான இரண்டு வெற்றிகளால் எல்லாருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது. இதுல என்னங்க இருக்கு ஆச்சர்யப்பட. பாக்கிஸ்தான் எப்போவும் இப்படித்தான். அவங்க எப்ப ஜெயிப்பானுங்க எப்ப தோத்துப்போவனுங்கன்னு அவனுங்க 'மேட்சை ஃபிக்ஸ்' பண்ற புக்கிக்கே தெரியாது.

ரெண்டு ஆட்டத்தை வென்றவுடனே பாக்கிஸ்தான் அணி என்னமோ வலிமையான அணின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு ஒரு சின்ன எச்சரிக்கையா அமைஞ்சதுதான் கனடா ஆட்டம். எப்படியோ தட்டு தடுமாறி 180+ ஓட்டங்களை எடுக்கவிடாம ஜெயிச்சுட்டாங்க. அப்பவே மண்டைக்குள்ள மணி அடிச்சுச்சு. பாக்கிஸ்தானும் (இந்தியாவும் என பிராக்கெட்ல போட தேவையில்லைன்னு நினைக்கிறேன்) தேறுவது மாதிரி தெரியலன்னு. காரணம், அவங்க பந்துவீச்சுல அஃபிரிடி தவிர வேற யாரும் பெருசா கிழிக்கிற மாதிரி தெரியல. அப்புறம், தொடக்க ஆட்டமும் ரொம்ப பலவீனமா இருக்கு.

நினைச்ச மாதிரியே கனடா தவற விட்டதை நியுசிலாந்து செய்து காட்டிடுச்சு. கடைசி அஞ்சு ஓவர்ல 100 ரன்ஸ். என்ன அடி... என்ன அடி!!! இதுக்கு நம்ம இந்திய பந்துவீச்சே பரவாயில்லை(நம்மள நல்லவனா ஆக்கிட்டாய்ங்களே) போல. இப்போதைக்கு ஆஸ்திரேலியா தவிற வேற எவனும் தேருற மாதிரி தெரியல.

இன்னிக்கு இந்திய அணிக்கு ரொம்ப கடினமான சோதனை. நமக்குத்தான் சோமாலியா கூட ஆடுனாலும் ஆட்டம் 'டஃப்'பா இருக்குமாமே. சாயாக்கடையில பேசிக்கிட்டாய்ங்க. :)

Sunday, March 6, 2011

நான் சொல்றது சரியா ??

இன்றைய ஆட்டங்கள் க்ரூப் பியின் முக்கியமான ஆட்டங்கள் ஆகும். இந்தியாவுடன் டையும், அயர்லாந்துடன் தோல்வியும் கண்ட இங்கிலாந்து அணி வலிமையான தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து மோதவிருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் சிறந்த வேகப் பந்துவீச்சு இணையை கொண்டுள்ள அணி இது. ஸ்டெயின் ஒருபுறம் அதி வேக அவுட்ச்விங்கர்களில் பயமுறுத்தினால் உடம்புக்கு குறிவைத்து பவுன்சர்களை போடுவதில் மார்க்கல் வல்லவர்.

இவர்களை அடுத்து புதிய வரவான தாகிர் . இவரது பந்துவீச்சை எப்படி இங்கிலாந்து எதிர் கொள்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏற்கனவே கவுண்டி மேட்ச்களில் இவரை அவர்கள் விளையாடி இருக்கலாம். அடுத்து தென்னாப்ரிக்காவின் பேட்டிங். இப்போதைக்கு வலுவாகத் தெரிகிறது. இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நன்றாகத் தான் விளையாடி உள்ளனர். இங்கிலாந்து பந்து  வீச்சாளர்கள் ஒழுங்காக பந்து வீசாவிட்டால் எப்படியும் முன்னூறு ரன்களுக்கு மேல் குவித்து விடுவார்கள். எனவே இங்கிலாந்து ஜெயிப்பதும் தோற்பதும் அவர்களுடைய பந்து வீச்சாளர்களின் கையில்தான் உள்ளது. 

அதேபோல் பேட்டிங்கில் பீட்டர்சன் சொதப்பாமல் ஆட வேண்டும். முப்பது நாற்ப்பது ரன்கள வேகமா அடிப்பது பின் அவுட் ஆவது என்பதை மாற்றி களத்தில் நிலைத்து நின்று ஆட முயற்சிக்கவேண்டும். அணியிங் மிடில் ஆர்டர் ரொம்ப பலவீனமா இருக்கு , கடைசி நேரத்தில் இந்தியாவை விட மோசமா சரியாறாங்க. எனவே ட்ராட் கடைசி வரை நின்று ஆட முயற்சி செய்தால் நல்லது. அதேபோல் கொளிங்க்வுத் அணிக்கு தேவையா என்று யோசிக்க வேண்டும். பந்துவீசும் சரியில்லை, பேட்டிங்கும் இல்லை அவருக்கு பதில் ரவி பொப்பாராவை சேர்க்கலாம் என்பது என் கருத்து.

பீல்டிங்கில் தென்னப்ரிகா சிறந்த என்பதால் அவர்கள் 330 அடித்தால் அது 350 க்கு சமம். ஆனால் இங்கிலாந்தின் பீல்டிங் இந்தியாவைப் போன்றுதான் இருக்கிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்றால் ,அவர்களது நிலை இன்னும் மோசம் ஆகும். அதே சமயம் ,பங்களாதேஷ்,அயர்லாந்து அணிகளுக்கு காலிறுதியில் நுழைய வாய்ப்புகள் இருக்கும்.

என்னை பொறுத்தவரை இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்க விரும்புகிறேன். புதுசா ஒரு அணி காலிறுதிக்கு வரட்டுமே. என்ன நான் சொல்றது சரியா ??


அன்புடன் எல்கே 

Saturday, March 5, 2011

“கிரிக்கெட்” பற்றி உனக்கென்ன தெரியும்..?


“நீங்க கண்டிப்பா எதாவது உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும் அட்லீஸ்ட் உங்களுக்கு பிடித்த கேம்மாவது விளையாட வேண்டும்…உங்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்…?”

“கிரிக்கெட் டாக்டர்”
“ரொம்ப நல்லதா போயிற்று ஒரு வாரம் தொடர்ச்சியா கிரிக்கெட் விளையாடுங்க..ஒரு வாரம் கழிச்சி வாங்க டெஸ்ட் பண்ணி பாத்துடலாம்…கண்டிப்பா வெயிட்டுலே ஒரு மாற்றம் தெரியும்”

உடம்பு குறைக்கும் நோக்கில் டாக்டரை சந்தித்த, நம்ம ஹீரோ, அதன் பின் ஒரு வாரமாக ஒரே கிரிக்கெட் தான்…

“தம்பி தீயா விளையாடனும்னு” அவருக்கு அவரே உற்சாகப் படுத்திக் கொள்வார்…ஒரு வாரம் முடிந்த்து…தெரிந்த வரை அவர் உடல் எடையில் ஒரு மில்லி மீட்டர் கூட குறைந்ததாகத் தெரியவில்லை. டாக்டரை சந்தித்தார்.."

டாக்டர் வெயிட் செக் பண்ணினார்…பெரு மூச்சு விட்டார்.. ஒரு கிலோ ஏறியிருந்தது..!

“என்ன நான் சொன்ன படி செஞ்சீங்களா?”

“ ஆமா டாக்டர், தினமும் ஒரு மணி நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டுத்தான் மறு வேலை”

“நீங்க பேட்ஸ் மேனா? பௌலரா..?

“எல்லாமே நான் தான் டாக்டர்”

“ஆல் ரவுண்டரா அப்படின்னா கண்டிப்பா குறைஞ்சிருக்கணுமே…? ஆமா யார் கூட விளையாடுறீங்க?”

“ ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அல் மோஸ்ட் எல்லா டீமோடையும்”

டாக்டருக்குத் தலை சுற்றியது..சுதாரித்துக் கொண்டு,
“அடடே இப்ப வெல்லாம் உள்ளூர் டீமுக்கே இண்டர் நேஷனல் அளவுக்கு பேர் வச்சிடுறீங்களா..?வாரம் முழுதும் விளையாடுனீங்களா? இல்லை இடையிலே லீவு எதாவது…?”

“ஒரே ஒரு நாள் பவர்கட் அன்றைக்கு மட்டும் விளையாட வில்லை”

“பவர்கட்டா? நீங்க என்ன டே நைட் மேட்சா விளையாடுறீங்க..!! ?

“என்ன டாக்டர் விவரம் இல்லாமே கேட்குறீங்க..? ஒரு நாள் முழுவதும் பவர் கட், யூபிஸ் கூட ஒரு மணி நேரம் தான் தாங்கும்,, இதுலே எப்படி கம்ப்யூட்டரை ஆன் பண்ணுறது..?

“கிரிக்கெட் விளையாட எதுக்கு கம்ப்யூட்டர்..?”

கம்ப்யூட்டர் கேம் விளையாட கம்ப்யூட்டர் இல்லாமே எப்படி டாக்டர் ..?
என்னது கம்ப்யூட்டர் கேமா ? நீ இவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் கேம் கிரிக்கெட் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தீயா..? என்று டாக்டர் மயக்கம் போட்டு விழுந்தார்…

என்னைத் தெரிந்தவர்கள் இந்தக் கதையை படித்தால் உன் சொந்தக் கதையா இது..? என்று கேட்பார்கள் அந்த அளவிற்கு எனக்கும் இந்தக் கதைக்கும் எனக்கும் நிறைய தொடர்பு உண்டு...:-)

பாஸ்ட் பௌலர் நவ்பலுடன் இந்த ஆடுகளத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த வேளை, நீங்களும் ஆடுகளத்தில் எழுதுங்களேன்ன்னு ..ஒரு உரிமையுடன் என்னைக் கேட்ட போது…”அட இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புதுன்னு தான் தோன்றியது”வீடியோ கேம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் நானும், அவ்வப்போது நம்ம அணியினரை விமர்சிப்பேன். ( நம்ம அணியை விமர்சிக்க அந்தத் திறமை போதும்னு சொல்லிடாதீங்க) நண்பர்கள் டெண்டுல்கர், பாஜி, தோனி , சேவாக் ஆகியோர் பொறுத்துக் கொள்ள வேண்டும்..:-)


இண்டர்நேசனல் ப்ளேயருக்கு டேமேஜ் அதிகமா இருக்காதுன்னு நம்பறேன்…:-) நமக்கெல்லாம் களத்துலே இறங்கி விளையாடுறதுன்னாத்தான் அலர்ஜி, மற்றபடி களத்துக்கு வெளியே இருந்து விமர்சிப்பதுன்னா…நம்ம ஆளுங்களை மிஞ்ச முடியாது ..:-) இல்லேன்னா ரவிசாஸ்திரி மாதிரி ஆட்களெல்லாம் இப்ப மைக்கை பிடிச்சுக்கிட்டு ஒரு ஓவருக்கு இருபது ரன் எடுக்குறவங்களையெல்லாம் கமெண்ட் பண்ண முடியுமா..?.:-) ( அவரெல்லாம் ஒரு மேட்ச் முழுதும் நின்றாலே அவ்வளவு தான் எடுப்பார்.:-)). அந்த வரிசையில் நானும் இப்ப இந்த குழுவுடன் மைக்கை பிடிச்சுவிட்டேன்…
இனி கிளப்புடா தம்பி கிளப்புடா…:-)
அன்புடன்
கீழைராஸா

Thursday, March 3, 2011

அயர்லாந்து vs இங்கிலாந்து

உலகக்கோப்பையின் வேகமான சதத்தை அயர்லாந்து வீரர் அடிப்பாரென்றும், அயர்லாந்து இரண்டாவதாக பேட் செய்து அதிகமான ஸ்கோரை அடித்து வெல்லும் என்றும் நேற்று மாலை வரை யாரவது சொல்லியிருந்தால் அவரை அனைவரும் பைத்தியக்காரன் என்றே நினைத்திருப்பர். ஏன், அயர்லாந்து வீரர்களே சிரித்திருப்பார்கள் .

ஆனால், இந்த இரண்டு ரெக்கார்டுகளும் இன்று அயர்லாந்து வசம். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்கள் அடித்தபொழுது, அனைவரும் இங்கிலாந்து எளிதில் வென்றுவிடும் என்றுதான் எண்ணி இருப்பார்கள். அதேபோல்தான் தொடக்கத்தில் அயர்லாந்தின் ஆட்டமும் இருந்தது . ஸ்டெர்லிங் சிறிது அடித்து ஆடினாலும் , சீக்கிரம் ஆட்டமிழந்து விட்டார். பாதி ஓவர்கள் முடிந்த நிலையில் இருநூறு ரன்களுக்கும் மேல் தேவைப்பட்டது,பாதி வீரர்களும் அவுட் ஆகிவிட்டனர். 

இந்த நிலையில்தான் கெவினின் ருத்ர தாண்டவம் ஆரம்பம் ஆகியது. முதலில் ஸ்வானின் சுழற்பந்துவீச்சில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அப்பொழுது கூட யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்படியும் சிறிது நேரத்தில் ஆட்டம் இழந்துவிடுவார் என்றே எண்ணினார்கள். 32 ஆவது ஓவரில் பேட்டிங் பவர்ப்ளேயை எடுத்த கெவின் மற்றும் குஷாக் இணை ஐந்து ஓவர்களில் 62 ரன்கள் குவித்தனர். இந்த ஐந்து ஓவர்கள்தான் ஆட்டம் மாற அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து அடித்து ஆடிய கெவின் உலகக்கோப்பை வரலாற்றில் வேகமான சதத்தை அடித்தார். ஐம்பது பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 

அவருக்கு உறுதுணையாக ஆடிய  குஷாக் 47 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆனப் பின் களமிறங்கிய மூனி துவக்கத்தில் சிறிது தடுமாறினாலும் , வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கெவின் அவுட் ஆனபின் பதட்டம் அடையாமல் நிதானமாக ஆடி அயர்லாந்தை வெற்றிப் பெற வைத்தார். 

அயர்லாந்து வெற்றிபெற கெவினின் ஆட்டம் முக்கியக்காரணமாக இருந்தாலும், இங்கிலாந்து  பேட் செய்தபொழுது கடைசி ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே அடித்ததும் ஒரு காரணம். பீல்டிங்கிலும் இங்கிலாந்து அதிகக் கேட்ச்களை தவறவிட்டது அயர்லாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

எந்த அணியாக இருந்தாலும், லேசாக எடைப்போடக் கூடாது என்பதும், எத்தனை ரன்கள் அடித்தாலும் வெற்றி உறுதி இல்லை என்பதும் இந்த ஆட்டத்தின் படிப்பினைகளாகும். 

அயர்லாந்தின் வெற்றி மீதம் இருக்கும் ஆட்டங்களை முக்கிய ஆட்டங்களாக மாற்றி  உள்ளது . இங்கிலாந்து இனி அனைத்து ஆட்டங்களையும் குறிப்பாக பங்களாதேஷ் உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும்.இல்லையெனில் காலிறுதியில் நுழைவது அவர்களுக்குக் கடினமாகி விடும். 

அன்புடன் எல்கே 

 

Tuesday, March 1, 2011

சச்சினும் இந்தியாவும் - எழுச்சியின் வரலாறு

எனக்கு சச்சினைப் பிடிக்காது. ஆனா சில சமயங்கள்ல சச்சின் இல்லாத இந்திய அணியை நினைச்சுப் பார்க்கவே முடியாது. இன்னைக்கு சச்சினைப் பத்தின ஒரு ஆர்ட்டிகிள் பார்த்தேன். அப்படியே வாயடைச்சுப் போயிட்டேன். உண்மைலேயே சச்சின் நமக்கெல்லாம் கிடைச்ச கிஃப்ட்.

நாம தான் சரியா உபயோகிக்கல...

பாகிஸ்தான் டெஸ்ட்ல முதுகுல பெல்ட் கட்டிக்கிட்டு கடைசி 14 ரன் எடுக்க முடியாம அவுட்டான போது பாகிஸ்தான் நாடே அழுதிருக்க சான்ஸ் இருக்கு. சச்சினோட கமிட்மெண்டுக்கு எனது சல்யூட்.

இப்ப நாம ஆர்ட்டிகிளுக்கு வருவோம். இந்த ஆர்ட்டிகிள் வந்திருக்கிற இடம் த டைம்ஸ் ஆஃப் இந்தியா. ஆர்ட்டிகிளின் தலைப்பு

சச்சினும் இந்தியாவும் : இரண்டு பெரும் எழுச்சியின் வரலாறு

http://timesofindia.indiatimes.com/articleshow/7598432.cms

மனஸ் குப்தா எழுதிய அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியும் உண்மையை அப்படியே எடுத்துரைக்கிறது. அவ்வப்போது சச்சினை அதிகம் புகழவும் செய்கிறது :-)

1990களில் தான் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்தது. அப்போது தான் மன்மோகன் சிங்கும், சச்சினும் தங்களின் பயணத்தை ஆரம்பித்தனர். - Quote

இவர்களின் முயற்சி இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு முக்கிய இடம் பெற்றுத் தரும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. - Unquote

கவாஸ்கர் இந்தியாவை தோல்வியிலிருந்து மீட்கப் பார்த்தார் என்றால் சச்சின் வெற்றிக்காக உழைத்தார். ரிச்சர்ட்ஸின் அடிதடியும், கவாஸ்கரின் நுணுக்கமும், கபில்தேவின் இதயமும் கொண்டவர் லிட்டில் மாஸ்டர். வயதான பெண்மணிகள் பிரார்த்திக்கவும், வேலை செல்லும் ஆப்பீசர்கள் ஓபி அடிக்கவும், இளம் தலைமுறைக்கு உத்வேகமாகவும் அவதரித்தார் சச்சின் - Quote

ஷார்ஜாவின் மணற்புயல் போல் சச்சின் ஆடும் ஆட்டம்... சென்செக்ஸ் 10000 புள்ளிகள் உயர்வு. இந்தியாவின் அன்னிய செலவாணியும் சச்சினின் சென்ஞ்சுரிகளும் ஒரு சேர உயர ஆரம்பித்தன. ஒரு முறை ஸ்டீவ் வாக் சொன்னது, "நாங்கள் சச்சினிடம் தோற்றுவிட்டோம்". - Quote

இந்தியாவின் சாஃப்ட்வேர் கம்பெனிகள் தங்கள் முத்திரையை பதிக்க ஆரம்பித்த போது, இந்தியாவும் வெளி நாடுகளில் வெற்றிக் கனியைப் பறிக்கத் தொடங்கி இருந்தது.. அதன்பிறகு நடந்ததை உலகம் அறியும். - Quote

20 ஆண்டுகள் கடந்துவிட்டது. கீச்சுக் குரல் கொண்ட சிறுவன் தற்போது லெஜண்ட். உலகின் வேகமான வளரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் நாமும் ஒன்று. - Quote

சச்சினின் சாதனைகளில் இதுவரை கேட்டிராத சில:

  • 778 பௌலர்கள் சச்சினுக்கு பந்து வீசி இருக்கிறார்கள். அதில் 528 பேரால் சச்சினை அவுட்டாக்க இயலவில்லை. ஒரு முறை கூட.
  • இதுவரை 1145 மணி நேரம் சச்சின் பிட்சில் நின்றிருக்கிறார்.
  • இதுவரை 711 கிமீ ஓடி இருக்கிறார். (ரன் எடுக்க ஓடியவை மட்டும்)
 இந்தியாவின் சாதனைகளில் சில:

  • 1992ல் சென்செக்ஸ், ப்ரைவேட் ஏர்லைன்ஸ் எல்லாமும் ஆரம்பமானது.
  • ஐபிஎல் ஆரம்பம் 2008
  • உலகின் விலை குறைந்த கார் நானோ - 2010
என்னதான் சொன்னாலும், சச்சின் 100 போட்டா அந்த மேட்ச் இந்தியா தோத்திடும்னு தான் சொல்லப் போறேன் :)

நாய் வாலை............ :)