Showing posts with label ஆஸிஃப். Show all posts
Showing posts with label ஆஸிஃப். Show all posts

Thursday, March 1, 2007

அக்தர், ஆஸிஃப் நீக்கம்


நான் எதிர்பார்த்தது போலவே, பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சு வேதாளங்கள் அக்தர் மற்றும் ஆஸிஃப் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி பாகிஸ்தான் அணி மேற்கிந்தியாவிற்கு புறப்படுவதற்கு சற்று முன் அறிவிக்கப்பட்டது.


லண்டன் சென்றிருந்த அக்தர், ஆஸிஃப் இருவரும் 'இன்று வருவார்கள் நாளை வருவார்கள்' என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் இருவரும் இன்று வரை வந்தபாடில்லை. இருவரும் தமது உடலில் எஞ்சியிருக்கும் போதை பொருள் தடயங்களை அகற்றுவதற்காக லண்டன் சென்றிருக்கிறார்கள் என்று செய்தி வெளியானது எல்லாரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தும் இதுவரை அணியினருடன் வந்து சேராதது மர்மமாகவே உள்ளது. மீண்டும் ஒரு ஊக்கப் பொருள் சோதனைக்குட்பட அவர்கள் ஆயத்தமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.


அவ்விருவருக்கும் பதிலாக முஹம்மது சமி மற்றும் யாசிர் அராஃபத் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அணியினருடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணித்தனர். இந்த இருவர் இல்லாத பாகிஸ்தான் மிகவும் பலவீனமாக எனக்கு காட்சியளிக்கிறது. பார்க்கலாம் எப்படி விளையாடுகிறது இந்த பாக் அணி என்று.

Tuesday, February 27, 2007

ஊக்க மருந்தும் வேகப்பந்து வேதாளங்களும்

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு முதுகெலும்பான அக்தர் & ஆஸிஃப் இருவரும் சில மாதங்களாகவே பெரும் சிக்கலில் தவித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளின் போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் இருவரும் ஊக்க மருந்து உட்கொண்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுடன், பயிற்சியாளருக்கும் அக்தருக்கும் இருக்கும் மனக்கசப்பின் பின் விளைவாக இது கருதப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பாக் கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. இது கிரிக்கெட் உலகையே உலுக்கியது.

இருப்பினும், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களின் தூண்டுதல் பேரில் அவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். தற்போதைய உலகக் கோப்பை அணியிலும் இருவரின் பெயரும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், பாக் அணி மேற்கு இந்தியாவிற்கு புறப்படும் முன் அனைவருக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும் என்றும் இதனால் ஐ.சி.சியால் நடத்தப்படவிருக்கும் சோதனைகளில் யாரும் சிக்கி அணிக்கு அவப் பெயர் ஏற்படாமல் தடுக்க இயலும் என்றும் பாக் வாரியம் அறிவித்தது. உடனே அக்தரும் ஆஸிஃபும் லண்டனுக்கு பறந்தனர். அதற்கு அவர்கள் தெரிவித்த காரணமோ வேறு. அதாவது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் முழங்கால், முழங்கை காயங்களுக்கு தகுந்த வைத்தியம்/ஆலோசனை பெறுவதற்கே என அவர்களால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து வெளியாகும் செய்தி ஒன்று இருவரும், தங்கள் உடலில் உள்ள ஊக்க மருந்தான Nandrolone-ன் தடயம் உடலிலிருந்து முற்றிலும் அழிப்பதற்காகவே வந்துள்ளதாக தெரிவிக்கிறது. ஒருவர் ஊக்க மருந்து உட்கொண்டால் அதற்கான தடயம் உடலில் ஆறு மாதம் வரை இருக்குமாம். அதை அழிப்பதற்காகத்தான் இருவரும் லண்டன் சென்றுள்ளனர் என தெரிவிக்கிறது அந்த ஊடகம்.

அதற்கிடையில், பாக் கிரிக்கெட் வாரியம் மற்ற அனைத்து வீரர்களுக்கும் சோதனை நடத்தி முடிவும் அறிவித்து விட்டது. யாருக்கும் எதிர்மறையான முடிவு வரவில்லை. இந்த இருவருக்காக மட்டும் பாக் வாரியம் காத்திருக்கிறது. இருவரும் வருவதாக தெரியவில்லை. இதனால் பாக் வாரியம் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னதான் திறமை இருந்தாலும் இதெல்லாம் டூ மச் இல்லையா? பாக் கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் பதிலாக மாற்று வீரர்களாக முஹம்மது சமி மற்றும் அசார் மஹ்மூத் இருவரையும் தேர்வு செய்து வைத்துள்ளது. அக்தர் -ஆஸிஃப் வருகை தாமதமானால் சமி மற்றும் அசாருக்கு நல்வினைப்பயன் கிடைக்கும்.

சிக்கல்களில் சிக்கி தவிப்பது ஒன்றும் அக்தருக்கு புதிதல்ல. அவர் வந்த நாள் முதல் பல வித சிக்கல்களில் சிக்கி வெளியேறி வந்தவர்தான். அவரது திறமை ஒப்பற்றது. அவரை கண்டு மற்ற அணி வீரர்கள் நடுங்கி வருகின்றனர். ஆனால், இடையிடையே அவரது ஒழுங்கீனம் அவருக்கு அவப்பெயரையும் சிக்கல்களையும் ஈட்டி கொடுக்கிறது. ஆஸிஃப் கதையோ வேறு. புதிய இளம் திறமையான பந்துவீச்சாளர். அவர் இது போன்றவற்றிலிருந்து விலகி இருப்பதே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு நல்லது.

யாராக இருந்தாலும் தவறு செய்பவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.