Jonty Rhodes. இவரின் வருகைக்குப்பின் தான் கிரிக்கெட் உலகில் தடுப்பாட்டத்தின் (Fielding) இன்றியமையாமை உணரப்பட்டது. அதுவரையிலும் கிரிக்கெட் என்றாலே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டுமே நினைவுக்கு வரும். தடுப்பாட்டத்தின் போது ஏதோ 'அணிந்திருக்கும் உடை அழுக்காகி விடக் கூடாது' என்று விதி உள்ளது போல் நடந்துகொள்வார்கள் அனைத்து அணியினரும்.
1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது தான் இந்த 'மின்னல்' அறிமுகமானார். அந்த உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்று இம்ரான் கான் உலகக் கோப்பையை முத்தமிடும் காட்சி என்னதான் பல ஊடகங்களில் அச்சடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டாலும், பாகிஸ்தானுக்கெதிராக தெ.ஆ மோதிய போட்டியின் போது ஜாண்டி ரோட்ஸ் இண்ஜமாமை ரண்-அவுட்டாக்கிய காட்சி பல நாட்களுக்கு ரசிகர்கள் மனதை விட்டு அகல மறுத்தது உண்மை. நானெல்லாம் அப்போது பள்ளியில் படித்து(?)க் கொண்டிருந்த காலம். இன்னும் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது அந்த ரண்-அவுட்டை பற்றி சிலாகித்து நாங்கள் பேசி அரட்டை அடித்தவை.

நான் மட்டுமில்லை உலக அளவில் ஜாண்டி ரோட்ஸிற்கு ரசிகர்கள் உருவாகினர். முதன் முறையாக தடுப்பாட்டத்தையும் ரசித்து பார்க்க தொடங்கினர். தடுப்பாட்டத்தால் ஒரு ஆட்டத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்யலாம் என்ற நிலை முதன் முதலில் உருவானது அந்த ரண்-அவுட்டில்லிருந்துதான் என்பது மிகையில்லாத உண்மை. அந்த ரண்-அவுட்டின் வீடியோ கீழே.
அதே கால கட்டத்தில் (அதற்கு முன்பிருந்தே) இந்திய அணியில் ஒரு நட்சத்திர தடுப்பாட்ட வீரர் இருந்து வந்தார். அவர் தான் அசாருத்தீன். அசாருத்தீனின் த்ரோவை ரசிப்பதற்கே ஒரு கூட்டமிருந்தது. பந்தை இலாகவமாக பின்னோக்கி மின்னல் வேகத்தில் அவர் எறிவது ஒரு கண்கொள்ளா காட்சிதான். அப்போது இந்திய அணியில் ஜாண்டி ரோட்ஸுடன் ஒப்பிடுவதற்கு (ஜாண்டி ரோட்ஸுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்பது தான் உண்மை) ஒருவர் இருந்தார் என்றால் அது அசார் மட்டும் தான். அப்போதைய இலங்கை வீரர் ரோஸன் மகானாமவும் நல்ல தடுப்பாட்ட வீரராக இருந்தார்.
பின்பு தான் எல்லா அணிகளும் தடுப்பாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின. இந்திய அணியில் அஜய் ஜடேஜா, ப்ரவின் அம்ரே, ராபின் சிங் வந்தனர். தற்போதய அணியில் யுவ்ராஜ் சிங், முஹம்மது கைஃப், சுரெஷ் ராய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளனர். இந்திய அணியினரின் தடுப்பாட்டம் முன்னேற்றமடைந்துள்ளது என்பதற்கு சான்று கீழே உள்ள வீடியோ.
இன்றய கால கட்டத்தில் அனைத்து அணியினருமே பெரும்பாலும் சிறந்த தடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணியாகவே தங்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். இதற்காக தனியாக பயிற்சியாளர்களை கூட அமைத்து வருகின்றனர். இப்போதைய கிரிக்கெட் தாரக மந்திரம் என்னவென்றால் 'Catches win matches' என்பது தான். உங்கள் பார்வைக்காக சில Stunning Catches.
பின் குறிப்பு: ஒரு வருத்தமளிக்கக் கூடிய உண்மை என்னவென்றால் 'மின்னல்' ரோட்ஸிற்கு வலிப்பு நோய் உள்ளதென்பது தான். கொடுமையல்லவா இது?
